Monday, May 7, 2007

என் உயிரானவளே

என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய்
இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த
மறுக்கிறது என் காதலின் நினைவு

*
உன்னோடு வாழ்ந்த காலத்தை விட

உன் நினைவுகளோடு வாழும்காலம்தான்
அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட
விட்டதில்லை உன் ஞாபகங்கள்

*
எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்

உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக

*
என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு

பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.

*
உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை

யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்

உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை
யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன்
*
தயவு செய்து என் பெயரை உன்

பிள்ளைக்கு வைத்து விடாதே

நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்

*
என் ஆயுளின் அந்தியிலாவது உன்னைச்

சந்திக்க நேர்ந்தால் உன்னிடம் சொல்லச்
சுமக்க வார்த்தை இதுதான்

உன்னை நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே

-யாழ்_அகத்தியன்

1 comment:

Anonymous said...

//என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு
பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன்.//


சொல்ல வந்ததற்கும்
சொல்லில் வந்ததற்கும்
நடுவில்..
மெளனமானது

கவிதை..

நேசமுடன்..
-நித்தியா