Monday, March 17, 2008

அன்னையே தெய்வம்...[02]

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்


*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

நீ தூக்கவே
முடியாதளவுக்கு

*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்போது

*
எல்லாம் சேலைதான்
எனினும்

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்



-யாழ்_அகத்தியன்

அன்னையே தெய்வம்...!

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன

என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது

எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை

உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

*

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே

எத்தனை முறை
வேண்டுமானாலும்

குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்

*

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை

உன் எல்லா
குழந்தைக்கும்

ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே

*

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்

நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை

*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்

உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

*
நான்
பார்த்திருக்கிறேன்

உன் கண்
வலிக்காக அழாமல்

என் மேல்
விழுந்த தூசிக்காய்

நீ கண்ணீர்
சிந்தியதை

*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்

அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்

இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது

தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது



-யாழ்_அகத்தியன்

Sunday, March 16, 2008

இலக்கியமானவளே...!

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை

*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை

*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது

*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் என்றாலும்

அவளால் வாசிக்கப்படும்
கவிஞன் நான்

*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்


-யாழ்_அகத்தியன்

வரமானவளே...!

என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்

*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்

*

நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு

*
ஆயிரம் கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்

உன் பெயர் எழுதி
கவிஞனானேன்

*உனக்கான கவிதை என்று
தெரிந்தும் எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே

எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்



-யாழ்_அகத்தியன்

மனமானவளே..!

உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்

*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு

*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்

அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்

*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது

எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது

*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ

நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்


-யாழ்_அகத்தியன்

Friday, January 11, 2008

இயல்பானவளே..!

தன்னை விதைத்து
காதலை
எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்

காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்

என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்

*

நீ என்னை மட்டும்
உன்
வசப்படுத்தவில்லை
என் கவி
வாசகர்களையும்தான்

பார்
கவி எழுதிய என்னை
விசாரிக்காமல் எல்லாரும்
யாருக்காக எழுதியது என்று
உன்னை விசாரிப்பதை

*
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட

யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்

வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

*
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்

முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்

ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்

*
என்றும் உன் அருகே
நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம்
கிடைக்காமல் போனாலும்

உன் கால்தடங்கள் தேடியே
ஓடிவரப்போகும் உன்
குழந்தையாகும் வரம்கொடு

அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு


-யாழ்_அகத்தியன்

Thursday, January 10, 2008

மொழியானவளே..!

நான் - உறக்கம்
நீ - கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்

*
என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு

என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு

*

என் சொந்தங்களில் நான்தான்
முதல் கவிவாசகன் என்பதில்
சிறியகவலை எனக்கு

இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே

*
உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்

உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்


-யாழ்_அகத்தியன்

Tuesday, January 8, 2008

மன்னவனே..!

காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே

முடிந்தால் உன்னை
யார் கண்ணும் படாமால்
கூட்டிவா

அதுவே போதும்
நான் கவலையின்றி
கண் உறங்க

*
உனக்காக பிறந்தவள் நான்
என்றதில் குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட

உன் கவிதையின் கரு நான்
என்பதிலேயே தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்

*
பாவம் என் கன்னங்கள்
நீ ஆசையாய் கொடுக்கும்

ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்

தடவி பறிக்கும் என்
கைவிரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது

*
இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்

உன் புகைபடத்தை என்
அறையெங்கும் ஒட்டிவைத்து
என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்

*
வெக்கம் கேட்ட
கவிஞன் நீ

என் வெக்கங்களை
கவிதையாக்கியே

என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்


-யாழ்_அகத்தியன்

Saturday, January 5, 2008

உனக்கே உயிரானேன்...!

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்

*
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

*
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

*
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக

*

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை


-யாழ்_அகத்தியன்

பொங்கலோடு நீ..!

உன் பொங்கல் கவிதை
தித்திப்பதற்காகவே
சேர்த்தாயா உன்
சக்கைரைப் பெயரை
இப்படி இனிக்கிறதே

*
தினம் நீ
முறித்து தரும்
கரும்பின் சுவை
அலுத்துவிட்டது

எங்கே
கரும்பொன்றை
கடித்துவிட்டு தா

உன் இதழ் தொட்ட
சுவை அறிய வேண்டும் நான்

*
நீ கண் மூடி வழிபட வழிபட
தன் நெற்றிக் கண்ணையும்
திறந்து பிரகாசிக்கிறான்
சூரியபகவான்

*
சூரியபகவானுக்காய் நீ
போடும் நட்சத்திரக்
கோலத்தோடு உன்னை
பார்க்கும்போது
நிலாக்கோலம்தான்
ஞாபகம் வந்தது எனக்கு

*
எல்லாரும் கண்மூடி
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
நீ பாடிய தேவாரத்தை

நான் மட்டும் கண்திறந்து
கவனித்துக் கொண்டிருந்தேன்
எப்போ பிரியும் உன் இமைகள்
என்று


-யாழ்_அகத்தியன்

Wednesday, January 2, 2008

செல்லமானவளே..!

எல்லோருக்கும்
தை பிறந்தால்தான்
வழி பிறக்கும்

எனக்கு மட்டும் எப்போதும்
தைதான் என் வழியே நீ
என்பதால்

*
வந்துபோகும் நாட்கள் போல்
வந்து போகிறது நீ என்னோடு
இருக்கும் ஒவ்வொரு வருசங்களும்


*

நம் கல்யாண வருசத்துக்காகவே
என் காதல் வருசங்கள் ஒவ்வொன்றும்
நாட்களை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது

*

நான் எழுதாத
கவிதை நீ என்பதிலும்
எனக்கு மகிழ்சியே
ஏனெனில்
என் கவிதைகள்தான்
யார் யாரோ பெயர்களில்
உலகம் சுற்றுகிறதே

*
வருசத்தில் முதல் நாளில்
மட்டும் வாழ்த்த ஆயிரம்
உறவுகள்

வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க நீ


-யாழ்_அகத்தியன்