Wednesday, October 24, 2007

எங்கே என் உயிர்..!

எப்போதும் குளிரும் உன்
நினைவுகளில் நடு நடுங்கித்தான்
போர்த்துக் கொள்கிறேன் என்னைத்
தினமும் நான்

பாய் விரித்தும் உறங்க முடியாமல்
எனை சுருட்டிக்கொண்டிருக்கிறது
பிரிந்துபோன உனை இமைக்காது
தேடும் என் கண்கள்

நீண்டுகொண்டே போகும் இரவுகளில்
வளரும் நிலவோடு வளர்ந்துகொண்டே
போகும் உன் நினைவுகளை வழி
நடத்துகிறது இந்த பழைய மனசு

காயங்கள் பல கண்டபோதும்
நீ தூங்க புல்லாங்குழலானேன்

வலிதாங்கியே பழகிய என்னை
சுமைதாங்கியாக்கி அழகாய்
ஏறியமர்ந்தாய்

உன்னைச் சுமந்தே
உலகம் சுற்றிவந்தேன்
சுமக்கும் கழுதையாய் நான்

ஓரு நாள் ஏனோ உனை
இறக்கிவிடச் சொன்னாய்
பதறிப்போய் நான்
உன் வீட்டுவாசல் என்பதை
கவனிக்காது பத்திரமாய்
ஏற்றிய அதே கவனத்தோடு
கசங்காமல் இறக்கிவிட்டேன்

இதோ வாறேன் என
உன் வாசல் நுழைந்தாய்
இன்றுவரை நான் உனக்காய்
சிலையானதுதான் மிச்சம்

என்னை பட்டமாக்கி பறக்க
விட்ட காதல் தேவதையே
என்னை நானகவே
விட்டிருக்கலாம் நீ

கசக்கி எறிந்த கவிதையாய்
குப்பை தொட்டியில் கிடந்திருந்தாலும்
இப்பிடி நூலறுந்த பட்டமாய் உன்னிலே
நான் சிக்கிக் கிடப்பதைவிட அது மேல்

சரிவிடு
இனி எப்போதும் என்னைத் தேடி
வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது

இருந்தாலும்
உன் காதல் வார்த்தைகளால்
என் உயிரை எடுத்துப் போனாயே
அதையாவது
யாரிடமாவது கொடுத்தனுப்பு

சிலையாகிப்போன நான்
இறந்து போக வேண்டும்


-யாழ்_அகத்தியன்

No comments: