Wednesday, October 3, 2007

அவள் யாரோ !!!

அன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்

இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று

*
நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு

"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்

இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?

*
தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு

உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை

*
தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்

உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்

*
நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு

-யாழ்_அகத்தியன்

No comments: