Tuesday, October 9, 2007

மூச்சே என் முயற்சி...!

உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்

பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்

குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்

அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்

இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்

பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்

கைப்பாசை உதவியோடு ஐந்துநாள்
பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்

விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

ஆனால்.....
என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்

மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.


-யாழ்_அகத்தியன்

No comments: