Friday, September 28, 2007

ஈரமில்லா ரோஜா..!

நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்

*
நீ
எனக்குக் கொடுத்த தண்டனை
எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த
என்னைக் காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான்

*
நீ
என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது

ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்

*
உன்னால்
புகைக்கப்பட்ட சிகரட்
நான் என்றாலும் உனக்கு
முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்

*
என் வாழ்க்கை எனும்
பேருந்தில் இறங்கிப் போன
மறக்க முடியாத சாரதி நீ


-யாழ்_அகத்தியன்

No comments: