Wednesday, September 12, 2007

ஈழத்து அகதியாய் நான்...

நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்த
விட்டில் இன்று நான்

*
அம்மா அங்கே
அம்மாக்காக
அகதியாய்
இங்கே நான்

*
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக

*
தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்

*
வகுப்பறையில் மகள்
படிக்காட்டியும் உயிரோடு
திரும்ப வேண்டும்
சாமியறையில் தாய்

*
நான் இறந்தால் கொள்ளி
வைக்க வந்துவிடாதே நான்
பெற்றதில் உன்னை மட்டும்தான்
காப்பாற்ற முடிந்தது

*
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால்

அம்மா கவலையாய் பேசுவதை
கேக்கவே நேரம் முடிந்துடும்

*
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்

என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று

*
எப்ப அம்மா சொந்த
ஊருக்கு போவோம்

பொறு போவோம்

இருபது வருசமா
இதைத்தானே அம்மா
சொல்கிறாய்

*
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்

*
சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான
ஒத்திகை மகனே


-யாழ்_அகத்தியன்

No comments: