Thursday, September 6, 2007

முதல் கவிதை...

இதுவரை கணக்குகளை மட்டும்
விளங்கபடுத்த என் கையோடு
கூடிய பேனா

முதல் முறை உனக்கு கவி எழுத
என் கையோடு கூட்டியதில் வந்த
கழித்தல்கள் இவை

தயவு செய்து சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்
இன்னும் கலைந்துவிடும்

பல கோடி கவிதைகளை கண்டபின்னும்
பசியாறவில்லை இன்னும் காதலுக்கு
எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு
கவி

சிலையின் கையில் கொடுக்கப்பட்ட
பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன்
கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

எண்ணில் விட்டதில்லை
எழுத்துக்களில் விடுவதுண்டு
பிழை எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

உனக்காய் கவி எழுத விடிய விடிய
யோசித்ததில் இரவுகளின் நீளத்தை
என்னால் இப்படித்தான் அளக்க
முடிந்தது

நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
நமக்கு மிஞ்சப் போவது
எதுவுமில்லை என்று

தயவு செய்து அன்பே
என்னை மன்னித்துவிடு

உன்னை கணக்கிடச்சொல்
அரை நொடி போதும் என்
பேனாவுக்கு

உனக்காய் கவி எழுதச்சொல்
அரை ஜென்மம் போதாது

அன்பே...
காதலுக்கு கவிதை
அழகுதான் ஆனால்
கல்யாணத்துக்கு
கணக்கு மட்டும்தான்
அவசியம் எனவே

வா அன்பே வா
இன்றே ஆரம்பிப்போம்
நம் கணக்குகளை


-யாழ்_அகத்தியன்

No comments: